போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடைபெற்ற மோதல் தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பிரசாத்துக்குப் போதைப்பொருள் வினியோகம் செய்ததாக பிரதீப் குமார், ஜான் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், 11 கிராம் கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் பிரசாத் மூலமாகப் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது, பரிசோதனையில் நிரூபணமானது. இதையடுத்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு முன்னிறுத்தப்பட்ட ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
அவரது வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிபதி ஏற்றதால், முதல் வகுப்பு சிறையில் ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டார்.