அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஈரானின் அணு ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ‘மிட்நைட் ஹாமர்’ என்று பெயரில் ஈரான் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தியது.
அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்திருந்தது. அதன்படி, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
கத்தாரில் உள்ள மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளம், சென்ட்காம் தலைமையகம் ஆகிய அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைச் சரமாரியாக வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
கத்தாரில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தலைநகர் தோஹாவிலும் குண்டு சத்தம் கேட்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானின் இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கத்தார் அரசு, ஈரானின் 7 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக விளக்கமளித்தது. ஈரானின் தாக்குதலால் கத்தார், பஹ்ரைன், எகிப்து, குவைத், ஈராக், சவுதி அரேபியா, லெபனான், ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்வெளியை மூடின. அண்டை நாடான பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.