மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்ட நெல் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே நாட்டார் மங்கலம், அய்யம்பட்டி, சக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் 500க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கிராம மக்கள் சார்பிலேயே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொள்முதல் நிலையம் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 10 தினங்களாக அதிகாரிகள், கொள்முதல் செய்யும் பணியை திடீரென நிறுத்தி வைத்துவிட்டு அய்யம்பட்டியில் தனிநபருக்குக் கொள்முதல் நிலைய ஒப்பந்தம் வழங்கி அங்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.