திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் ரவி, நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் பாஸ்கர், அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் ராஜபாண்டி ஆகியோர், வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் நகைகளை முறைகேடாக பயன்படுத்தி, வைப்பு நிதி தொகையையும் கையாடல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனை தொடர்ந்து வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் இந்த மோசடி சம்பவம் குறித்து அறிந்து வங்கி முன்பு திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து அறிந்த தொண்டியம் போலீசார் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்த நிலையில், வங்கி உயர் அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.