தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக விடுதியில் மாணவிகள் மேற்கொண்ட உள்ளிருப்பு போராட்டம் 10 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது.
சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின் விடுதியில் கூடுதலாக மாணவிகளை தங்க வைத்தததால், விடுதியில் ஏற்கனவே தங்கியிருந்த மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேராசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் உள்ளிருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது.
இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இரவு 11.45 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவிகள், இட நெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
மூத்த வழக்கறிஞர்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக கூறினர். மேலும், கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவிகள் எச்சரிக்கை விடுத்தனர்.