திருச்செந்தூர் அருகே 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், அங்குள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் முத்துகிருஷ்ணனை பள்ளியில் ஆசிரியர்கள் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மாணவன் என் சாவுக்கு ஆசிரியர்கள் பியூலா, மேரி, வளர்மதி மற்றும் தலைமை ஆசிரியர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கண்ணன் உத்தரவிட்டார்.