செம்பட்டி அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில், கவரிங் நகைகள் கண்டுபிடிக்க சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்க நகைகளை அடகுவைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியில், அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சோனாஸ்ரீ என்பவர் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 130 சவரன் நகைகளை அடகுவைத்து 54 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள நிலையில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி 76 கிராம் நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சோனாஸ்ரீ அடகு வைத்த 76 கிராம் நகைகள் போலி எனக்கூறி அவரை நேரில் அழைத்து வங்கி அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது, நகை வைத்து 6 மாதங்களுக்கு பிறகு கவரிங் நகை என்று கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்த சோனாஸ்ரீ, இது தொடர்பாக வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நகை மதிப்பீட்டாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அடகு வைத்து கடன் பெற்றுள்ள நகைகளை திருப்புவதற்காக வங்கியில் கிராம மக்கள் குவிந்து வருகின்றனர்.