நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின், இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்று தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1975ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களால், நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, இன்றோடு (ஜூன் 25) 50 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் கட்சி இன்று அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து என்கிறது. அரசியலமைப்பை பாதுகாப்பதே தங்கள் லட்சியம் என்கிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் தான், இதே காங்கிரஸ் கட்சிதான், இதே ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி தான், டாக்டர் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கி, நெருக்கடி நிலையை அறிவித்தார்.
சுல்தான்கள், மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அன்னியர் ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த நாம், 1947ல் போராடி சுதந்திரம் பெற்றோம். நம் சுதந்திரம் என்பது ஆயிரம் காண்டு கால போராட்டம். அப்படி போராடி பெற்ற சுதந்திரத்தை, 28 ஆண்டுகளில் முடக்கி, தேசத்தை இருளில் தள்ளிய கட்சிதான் காங்கிரஸ். அவர்கள்தான் இன்று சாத்தான் வேதம் ஓதுவதுபோல, மற்றவர்களுக்கு ஜனநாயகப் பாடம் எடுக்கிறார்கள்.
1975 மார்ச் மாத இறுதியில், உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திரா காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், “வழக்கு விசாரணை முடியும் வரை இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகிக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் எந்த தீர்மானத்தின் மீதும் வாக்களிக்க முடியாது” என தீர்ப்பளித்தார்.
அந்த காலகட்டத்தில் 28 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, இந்திரா காந்தியின் அடக்குமுறைக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி கொண்டிருந்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புக்கு மதிப்பளித்து, பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி உடனடியாக விலக வேண்டும் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் போர்க்கொடி உயர்த்தினார். அப்போது பெரும் மக்கள் தலைவராக உருவெடுத்துக் கொண்டிருந்த அவரது குரல், இந்திரா காந்திக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது.
ஆனாலும், பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாமல், 1975 ஜூன் 25ம் தேதி நள்ளிரவில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அரசியலமைப்புச் சட்டம் முடக்கப்பட்டது. பேச்சு, எழுத்து, கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டது. மத்திய காங்கிரஸ் அரசையோ, பிரதமர் இந்திரா காந்தியையோ விமர்சித்தால் சிறை. அடி. உதைதான். இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம் இதுதான் நெருக்கடி நிலை. ஜெயப்பிரகாஷ் நாராயணன், வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்த, போராடி லட்சக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்திராவின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பெரும் போராட்டத்தை நடத்தின. அதன் விளைவாக, கொள்கையில் எதிரும், புதிருமாக இருந்த கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு ஜனதா கட்சியாக ஒன்றிணைந்தன.
இப்படி மக்களின் எழுச்சியாலும், எதிர்க்கட்சிகள், ஒரே கட்சியானதாலும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு இந்திரா காந்தி தள்ளப்பட்டார். 1977ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி, ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது. சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததாலும், இந்திராவின் சூழ்ச்சியாலும், மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு கவிழ்ந்தது. ஜனதா கட்சியில் இருந்த ஜனசங்கம் கட்சியினர் வெளியேறி, 1980 ஏப்ரல் 6ம் தேதி பாஜகவை தொடங்கினர்.
இப்படி ஜனநாயகத்தை முடக்கி, எதிர்த்தவர்களை எல்லாம் சிறையில் தள்ளி, அடக்குமுறைகளை ஏவிவிட்டு, கொடுங்கோல் ஆட்சி நடத்தியவரின் வாரிசுகள் இன்று, ஜனநாயக வழியில், அரசியலமைப்புச் சட்டத்தை வேதமாகக் கொண்டு ஆட்சி நடத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை விமர்சிக்கின்றனர். அரசியலமைப்புக்கு எதிரி என்கின்றனர்.
நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிந்த பிறகு, எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிறையில் அடைத்து விட்டு, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்தவர் இந்திரா காந்தி. இத்தைகைய ஜனநாயக விரோத கொடும் செயல் இந்திய வரலாற்றில் நடந்ததே இல்லை.
இப்படிப்பட்டவர்களின் வாரிசான ராகுல் காந்தி, இப்போது அரசியலமைப்பு புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டு வேடிக்கை காட்டி கொண்டிருக்கிறார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவில், காங்கிரஸ் ஆட்சியின், இந்திரா காந்தியின் ஜனநாயக விரோத செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். ஓராண்டு முழுவதும் இதைச் செய்வதுதான் ஜனநாயகத்திற்கு செய்யும் நாம் செய்யும் மரியாதை.