ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் நூற்றுக்கணக்கான வருவாய்த் துறையினர் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக வருவாய் துறையினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் பட்டா மாறுதல், சான்று ஆவணங்கள் பெற வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்த வருவாய்த் துறையினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் வருவாய்த் துறையினருக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை வருவாய்த்துறையினர் ஆட்சியரைச் சந்தித்து அளித்தனர்.
மயிலாடுதுறையில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு பேரணி தர்ணா போராட்டம் நடைபெற்றது. தருமபுரம் பகுதியில் தொடங்கிய பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 350க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.