சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 270 விண்வெளி ஆய்வாளர்கள் சென்றுள்ளனர். ஒரு இந்தியர் கூட செல்லவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இருந்து வந்தது. அந்த ஆசையும் கனவும் இப்போது நிறைவேறியுள்ளது. முதல்முறையாக ஒரு இந்தியர் சுபான்ஷு சுக்லா ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
முதன்முதலில் நிலவில் மனிதன் கால் பதித்தபின், விண்வெளித்துறை வேகமாக வளரத் தொடங்கியது. ஒருகாலத்தில் விண்ணில் தன் நாட்டு தேசியக் கொடியை நடுவதே சாதனை என்ற நிலை இருந்தது. பிறகு,விண்வெளி பற்றியும் பிற கிரகங்களின் தன்மைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் தொடங்கின.
இதன் ஒரு பகுதியாக விண்வெளி ஆய்வுகளுக்காகப் பல ஆண்டுகளாகச் சர்வதேச விண்வெளி மையம் பயன்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகளை நிறுத்த நாசா முடிவு செய்துள்ளது. அதன்பிறகு, நிரந்தரமாக ஆக்சியம் மையத்தை விண்வெளியில் ஏற்படுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
இஸ்ரோவும், நாசாவும் இணைந்து உருவாக்கிய திட்டம் தான் ஆக்சியம் மிஷன் திட்டம். கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் ஆக்சியம் பயணம். தொடர்ந்து மூன்று ஆக்சியம் விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆக்சியம் பயணத்தின் போதும், புதிய விண்வெளி மைய கட்டுமானப் பணிகளுக்காக ஒவ்வொரு பொருட்களையும் விண்வெளிவீரர்கள் எடுத்துச் சென்று,சர்வ தேச விண்வெளி நிலையத்தில் பொருத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
ஆக்சியம் விண்வெளி மையம் முழுமையாக கட்டப்பட்டதும், இந்த உபகரணங்கள் ஒவ்வொன்றாக நீக்கப் பட்டு ஆக்சியம் மையத்தில் இணைக்கப்படும். அதன்பிறகு சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகள் முழுவதுமாக நிறுத்தப்படும்.
ஒவ்வொரு ஆக்சியம் பயணத்திலும் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். தற்போது ஆக்சியம்-4 பயணத்தில், இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
ககன்யான், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாகும். அடுத்த ஆண்டு, திட்டமிடப்பட்டுள்ள ககன்யான் விண்வெளி பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட நான்கு இந்தியர்களில் சுபான்ஷு சுக்லாவும் ஒருவர்.
2023 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாகச் சென்றபோது, இந்த திட்டம் இறுதியானது. அதிர்ஷ்டவசமாக, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் ஆக்சியம்-4 யை இயக்கும் விமானியாக சுக்லா விண்வெளிக்குச் செல்கிறார். சர்வ தேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைச் சுக்லா பெற்றுள்ளார். ஆக்சியம்-4 குழுவின் துணை விமானி பிரஷாந்த் நாயரும் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆக்சியம் திட்ட விமானியின் பங்கு, விண்கலத்தின் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. விண்ணில் விண்கலத்தை ஏவுவது தொடங்கி, மீண்டும் பூமிக்குத் திரும்புவது வரை அனைத்து செயல்பாடுகளிலும் சுக்லா முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறப்படுகிறது.
பூமியில் இருந்து பயணத்தைத் தொடங்கிய ஆக்சியம் பயணம் 28 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி நிலயத்தைச் சென்று அடைகிறது. அங்கே,14 நாட்களில், 31 நாடுகளுக்குச் சொந்தமான 60 ஆராய்ச்சிகளை விண்வெளி வீரர்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்த பயணத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல், 14 நாட்கள் பரபரப்பான அட்டவணையைக் சுக்லா திட்டமிட்டு வைத்திருக்கிறார்.
இந்தியாவின் பல்வேறு தேசிய ஆராய்ச்சி விஞ்ஞானிகளால் முன்மொழியப் பட்ட ஏழு நுண் ஈர்ப்பு விசை அறிவியல் சோதனைகளை இஸ்ரோ பட்டியலிட்டு சுக்லாவிடம் தந்துள்ளது. ஆறு வகையான பயிர் விதைகளில் விண்வெளிப் பயணத்தின் தாக்கத்தை ஆராய்வது உள்ளிட்ட சோதனைகளை சுக்லா விண்வெளியில் ஆய்வுக்கு உட்படுத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. பூஜ்ய ஈர்ப்பு விசையை குறிக்கும் ஒரு குறிப்பாகவே அன்னப் பறவை பொம்மை எடுத்துச் செல்லப் பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.
குறிப்பாக, விண்வெளியில் இருந்த படியே, பிரதமர் மோடியுடனான சுக்லாவின் உரையாடலும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விண்வெளியிலிருந்த படி, இந்திய மாணவர்களுடன் உரையாடவும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, பிற ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ‘விண்வெளி செங்கல்கள்’ மற்றும் விண்வெளி வீரர்களுக்கான வாழ்விடங்கள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சுக்லா எழுதியுள்ளார். விண்வெளியில் நிலையான மனித இருப்புக்கு, அதிகமான ‘விண்வெளி வீடுகள்’ தேவைப்படும் நிலையில் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சுக்லாவின் விண்வெளி பயணம் இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.
புதிய விண்வெளி யுகத்துக்கு நாட்டை இட்டுச் செல்லும் பிரதமர் மோடியின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்துக்கு, சுக்லாவின் விண்வெளி பயணம் ஒரு முக்கிய மைல் கல்லாகும். மேலும்,2035 ஆம் ஆண்டுக்குள் ஒரு விண்வெளி நிலையத்தை அமைப்பது 2040 ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு ஒரு விண்வெளி வீரரை அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டங்களுக்கும் முதல் அடியை வெற்றி அடியாக சுக்லா எடுத்து வைத்துள்ளார்.