அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் இன்று மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைய உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் அடங்கிய குழுவை அனுப்ப நாசா திட்டமிட்டது. ஆக்சியம்-4 திட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் இடம்பெற்ற நிலையில், மோசமான வானிலை மற்றும் ஆக்சிஜன் கசிவு ஆகிய காரணங்களால் ஆக்சியம்-4 திட்டம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், வானிலை 90 சதவீதம் சாதகமாக இருந்ததால், திட்டமிட்டப்படி ஆக்சியம்-4 திட்டம் செயல்படுத்தப்படும் என நாசா அறிவத்தது. அதன்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை தாண்டி விண்ணில் பாய்ந்தது. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் இந்திய நேரப்படி நேற்று மதியம் 12:01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
28 மணி நேர பயணித்திற்கு பிறகு இன்று மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சென்றடைய உள்ளது. வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என்றும், இதில், 60 அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் பிராணவாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள், பயிர்கள் வளர்ச்சி குறித்த ஆய்வில் சுக்லா ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.