பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது என்றும், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. குவிங்டாவ் நகரில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன் வரவேற்றார்.
இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.
சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என்பதை இந்தியா நம்புகிறது என கூறினார். அமைதி, பாதுகாப்பு போன்ற சவால்களை உலக நாடுகள் சந்தித்து வருவதாக கூறிய அவர், இந்த பிரச்னைகளுக்கு மூல காரணம் அதிகரித்து வரும் பயங்கரவாதம் என தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும், இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை எனவும் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ள நாடுகளை விமர்சிக்க தயங்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய தக்க பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்ட அவர், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பிராந்திய மேம்பாட்டு கூட்டாளி என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.