உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் வெளிநாடு பயணம் சென்றிருந்தால் அதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அதை விடுத்து மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகை கிளை மேலாளரான இளங்கோவன், 117 நாட்கள் விடுப்பு எடுத்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததாகவும், முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்ததுடன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 916 ரூபாய் ஊதியமாகப் பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து இளங்கோவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு, நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்குத் தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது எனக்கூறி தண்டனையை ரத்து செய்தது.