சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க, ஜார்ஜ் டவுன் 3வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாக எம்எல்ஏ ஜவாஹிருல்லா, முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த எழும்பூர் நீதிமன்றம், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப பரிந்துரைக்கப்படும் வழக்குகளை மட்டுமே தங்களால் விசாரிக்க முடியும் எனக்கூறி சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதனை அடுத்து, எம்எல்ஏ ஜவாஹிருல்லா, முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரிக்கச் சென்னையில் சிறப்புக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்க ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, எம்எல்ஏ ஜவாஹிருல்லா, முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிரான வழக்கில், ஜார்ஜ் டவுன் 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம் என உத்தரவிட்டனர்.