உடுமலை அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் மது அருந்தியவர்களைத் தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை அப்பகுதியில் பணியாற்றும் ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஆசிரியர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றனர். அப்போது ஆசிரியர் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் அவர்கள் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.