மாம்பழ விவசாயிகளைக் காக்கத் தமிழக அரசு தவறிவிட்டதாகச் சேலம் மாவட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாம்பழ மாலையுடன் வந்து விவசாயிகள் மனு அளித்தனர்.
வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாம்பழ விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும், மாம்பழங்களைப் பறிக்க ஆட்கள் மற்றும் வாகன கூலியாக 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
500 கிலோ மாம்பழம் 3 ஆயிரம் ரூபாய்க்கு விலை போவதால், மாம்பழ விவசாயிகளைக் காக்க அரசு தவறிவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், சேலத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும், சேலத்தில் மாம்பழ கண்காட்சி அமைத்துத் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
உலகப் புகழ்பெற்ற சேலம் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர அரசு முயற்சி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.