போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடிகர் ஸ்ரீகாந்தை போலவே நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழவே, அவரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் நடிகர் கிருஷ்ணாவையும், அவருக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக கெவின் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கெவினிடம் இருந்து கொக்கைன், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கைதான இருவரும் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவருக்கும் ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் கிருஷ்ணாவுக்கு மட்டும் முதல் வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது.