கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு, அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர்க் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் வீடு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாகக் கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ்த் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து திலகவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்தார்.
அரசாணையில் திருத்தம் செய்வதாக இருந்தால் கூட அதை முன் தேதியிட்டு அமல்படுத்த கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.