2020 கல்வான் மோதலுக்குப் பிறகு இந்தியாவின் வடக்கில், J-20 ரகப் போர் விமானங்களுடன் சீனா ஒரு அச்சுறுத்தல் என்றால், சீனாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட JF-17 ரகப் போர் விமானங்களுடன் பாகிஸ்தான், இந்தியாவின் மேற்குப் பகுதியில் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில், தனது மேம்பட்ட சுகோய் Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. பாதுகாப்பு ரீதியாக இந்தியாவுக்கு ஏன் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனா பாகிஸ்தானுக்கு J-35A போர் விமானங்களைக் கணிசமான தள்ளுபடியில் வழங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சீனாவில் இந்த மேம்பட்ட விமானங்களுக்கான பயிற்சியில் பாகிஸ்தான் விமானிகள் ஈடுபட்டுள்ளனர். இது இந்தியாவின் பாதுகாப்புச் சவாலாக இருப்பதோடு, ஐந்தாம் தலைமுறைப் போர் விமான திறன்களை பாகிஸ்தானுக்கு வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
நவீனப் போர் விமானங்களில் மூலக் குறியீடு என்பது வெறும் CODING அல்ல. அதுதான் ஒரு போர் விமானத்தின் மூளையாகும். போர் விமானம் எவ்வாறு பறக்கிறது ? எதிரி ரேடாரில் இருந்து எப்படித் தப்பிக்கிறது ? சூழலுக்கு ஏற்ப எப்படித் தாக்குகிறது ? மற்றும் போரின் போக்கை எப்படி மாற்றியமைக்கிறது ? என்பதை எல்லாம் இந்த மூலக் குறியீடு தீர்மானிக்கிறது.
அமெரிக்காவின் F-35 போர் விமானம் 10 மில்லியனுக்கும் அதிகமான மென்பொருள் குறியீடுகளைக் கொண்டுள்ளது. சீனாவின் J-20 மற்றும் FC-31 ஆகிய போர் விமானங்கள் இதேபோன்ற அதிநவீன மென்பொருள் கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
உலகின் அதிநவீனப் போர் விமானமான ரஷ்யாவின் Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தின் மூலக் குறியீடுகள் மிக அதிகமாக உள்ளன. பொதுவாக,ஒரு நாடு, இன்னொரு நாட்டுக்குப் போர் விமானத்தை விற்கும் போது விமானத்தை மட்டுமே அளிக்கும். அந்த விமானத்தின் மூலக் குறியீட்டைக் கொடுப்பதில்லை.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நட்பு நாடுகளுடன் கூட F-35 இன் முழு மூலக் குறியீட்டைப் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா, மறுத்துவிட்டது. ரஃபேலின் மூலக் குறியீட்டை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப் பிரான்ஸ் மறுத்துவிட்டது. முதல்முறையாக, ரஷ்யா, தனது Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தின் மூலக் குறியீட்டை முழுமையாக இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.
அதாவது, Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கேற்ப உருமாற்றவும், உள்நாட்டு ஆயுதங்களை ஒருங்கிணைக்கவும், அதன் செயல்பாட்டு அமைப்புகளை விருப்பப்படி மாற்றவும் ரஷ்யா அனுமதி அளித்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும். சுயசார்பு பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் நீண்டகால லட்சியத்தில் இது முக்கிய திருப்புமுனையாகும்.
இதன் மூலம், ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் வகைப் போர் விமானங்கள் மீது இந்தியா தனது ஆளுமையை நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கெனவே , F-35 லைட்னிங் II போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், ரஷ்யா தனது Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தை மூலக் குறியீட்டையும் இந்தியாவுக்கு இருப்பது அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் எனப்படுகிறது.
ரஷ்யா தனது இராணுவ வன்பொருளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் எதிர்ப்புகளையும் மீறி, 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ரஷ்யா S-400 ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் Su-30MKI போர் விமானங்களை வழங்கியது. ரஷ்யாவின் இந்தப் போர் ஆயுதங்கள் இந்தியாவின் வான்வழி பாதுகாப்பின் மையமாக விளங்குகின்றன
இந்தியா ஐந்தாம் தலைமுறைப் போர் திறன்களை விரைவாகப் பெறுவதற்கான வாய்ப்பை ரஷ்யா வழங்கியுள்ளது. மேலும், எதிர்கால உள்நாட்டு ஆயுத உற்பத்தி திட்டங்களுக்கான தொழில்நுட்ப அடித்தளத்தையும் ரஷ்யா அமைத்துக் கொடுத்துள்ளது. Sukhoi Su-57E என்ற ஐந்தாம் தலைமுறைப் போர் விமானம் 2022ம் ஆண்டு ரஷ்ய விமானப்படையில் முதன்முதலில் சேர்க்கப்பட்டது. இது, ரஷ்யச் சுகோய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பல்பணி போர் விமானமாகும்.
ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட முதல் விமானம் இதுவாகும். அமெரிக்காவின் F-35 மற்றும் சீனாவின் J-20 போர் விமானங்களை விடவும் அதிநவீனப் போர் விமானமாகும். இந்த ஐந்தாவது தலைமுறை ஸ்டெல்த் மல்டிரோல் போர் விமானம் வான், தரை மற்றும் கடலில் இருந்து ஏவும் திறன் கொண்டதாகும்.
சூப்பர்ச் சூழ்ச்சித்திறன் மற்றும் அதிகபட்ச வேகம் கொண்ட போர் விமானமாகும். இது 10 டன் வரை வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். அதிநவீன ரேடாரில் சிக்காமல் தப்பித்துப் பறந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் தொழிநுட்பம், Su-57E போர் விமானத்தின் சிறப்பு அம்சமாகும்.
சுறுசுறுப்பு, மின்னணு போர்த் திறன் மற்றும் Kinzhal missile கின்சல் போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் இந்த Su-57E போர் விமானம் தனித் தன்மையுடன் விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 220 Su-30MKI விமானங்களை வெற்றிகரமாக Hindustan Aeronautics உற்பத்தி செய்துள்ளது. Su-30MKI போர் விமானத்துக்குப் பயன்படுத்தப்படும் அதே கருவிகள் மற்றும் இயந்திரங்கள் Su-57 உற்பத்திக்கும் பயன்படும் என்பதால், இந்தியா விரைவில் Su-57 உற்பத்தியில் சாதனைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சொல்லப் போனால், Su-57E ஒரு போர் விமானத்தை விட அதிகம். இந்தியாவின் உள்நாட்டுச் சென்சார்கள் மற்றும் ஆயுதங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டால், அது ஒரு பெரும் படைக் கட்டமைப்பு போன்று செயல்படும். கூடுதலாக, இந்தியாவின் எதிர்கால ஆறாவது தலைமுறை விமான மேம்பாட்டுக்கான அடித்தளமாகவும் அமையும்.