இந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இந்துக்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தின் டாக்கா நகரில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துத் துர்கா தேவி கோயில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, அந்தக் கோயிலை இடிக்க இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
இதனை அடுத்து, ஜேசிபி மூலம் அந்தக் கோயில் இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்து இந்துக்கள் ஒன்று கூடி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் வங்கதேச அரசிற்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
வங்கதேசத்தில் துர்கா கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசு, அந்நாட்டின் இந்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் மத நிறுவனங்களைப் பாதுகாக்கத் தவறியதாக வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதுகாப்பை வழங்க வேண்டிய வங்கதேச அரசு, இந்து கோயிலை இடிக்க அனுமதித்தற்கு அவர்க் கண்டனம் தெரிவித்தார். வங்கதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வது வருத்தமளிப்பதாகவும், இந்துக்கள் மற்றும் அவர்களின் சொத்துகளைப் பாதுகாப்பது வங்கதேச இடைக்கால அரசின் பொறுப்பு என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தினார்.