முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் நீர்மட்டம் 135அடியைத் தாண்டியுள்ளது. இதையடுத்துக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாறு அணை, தேக்கடி ஆகிய பகுதிகளில் பலத்த மழைப் பெய்து வருகிறது.
இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையில் நீர்மட்டம் 135 அடியை எட்டியது.
இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரத்து 506 கன அடியில் இருந்து 3 ஆயிரத்து 786 கன அடியாகக் குறைந்துள்ளது.
கணிசமான நீர்வரத்தால் அணை நீர்மட்டம் 135.60 அடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டம் 136 அடியைத் தாண்டும் பட்சத்தில், அணையின் 13 மதகுகள் வழியாகக் கேரளாவிற்கு உபரி நீர்த் திறக்க வாய்ப்புள்ளதாகத் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், முல்லைப் பெரியாறு நீர் வழித்தடங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.