முசிறி அருகே உள்ள ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
திருச்சி மாவட்டம் நெய்வேலி கிராமத்தில் சுமார் 150 ஏக்கர்ப் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது.
தற்போது இந்த ஏரியில் தண்ணீர்க் குறைவாக உள்ள நிலையில் ஏரியில் கிராம மக்கள் மீன் பிடி திருவிழா நடத்திட முடிவு செய்தனர்.
இதையடுத்து, நெய்வேலி, சித்தாம்பூர், வீரமணிபட்டி, தண்டலைப்புத்தூர் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர்.
கத்தா, சுருக்கு வலை, அரி வலை, கொசு வலை ஆகியவற்றின் உதவியோடு பொதுமக்கள் மீன்களைப் பிடித்தனர். கெண்டை, கெளுத்தி, சர்க்கார், விரால், சங்கரா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.