சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோயிலில் அஜித்குமார் என்பவர் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவர், அஜித்குமாரிடம் கார் சாவியை கொடுத்து பார்கிங்கில் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
பின்னர், சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த 10 சவரன் நகைகள் மாயமானதாக தெரிகிறது. இது குறித்து நிக்கி அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீசார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், காவல் நிலையத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், காவல் நிலையத்தில் னது சகோதரரை போலீசார் கடுமையாக தாக்கியதாக வேதனை தெரிவித்தார். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லும்போதே வாகனத்தில் வைத்து 5க்கும் மேற்பட்ட காவலர்கள் தனது சகோதரரை தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், தன்னையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தில், 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட எஸ்பி ஆஷித் ரவத் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிப்படையான விசாரணை நடத்தவும் எஸ்பி ஆணையிட்டுள்ளார்.