சென்னையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் 418 கிலோ மீட்டர் தூரத்திற்கு 488 பேருந்து தடச் சாலைகள் மற்றும் 5 ஆயிரத்து 653 கிலோ மீட்டர் தூரத்திற்கு 35 ஆயிரத்து 978 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 266 கிலோமீட்டர் தூரத்திற்கு 375 பேருந்து சாலைகளும், இரண்டாயிரத்து 170 கிலோமீட்டர் தூரத்திற்கு 13 ஆயிரத்து 909 உட்புற சாலை பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் 150 கோடி ரூபாயில் ஆயிரத்து 195 சாலைகளும், நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 63 கோடி ரூபாயில் 857 உட்புற சாலைகளும், சிறப்புத் திட்ட நிதியின் கீழ் 180 கோடி ரூபாயில் ஆயிரத்து 590 உட்புற சாலைகள் என மொத்தம் 489 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 987 சாலைகள் அமைக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இந்த சாலை பணிகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.