திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்தது உடற்கூராய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் உடலை பிரேத பரிசோதனை நடத்தியதில் அவர் கடும் சித்திரவதைக்குள்ளான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிவுகளின் படி அஜித்குமாரின் உடலில் 18 வெளிப்புற காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காயங்கள் மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என உடல் முழுவதும் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசிவு போன்றவை கூட மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வழக்கமாகப் பிரேதப் பரிசோதனை 2 மணி நேரம் நடக்கும் நிலையில் அஜித் குமாரின் உடலில் நடந்த பிரேதப் பரிசோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது.