வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்குக் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த Leung Kai Fook Medical Company தயாரிக்கும் கோடரி தைலத்தைச் சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆக்சென் மார்க்கெட்டிங் இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், கோடரி தைலத்திற்கு உரிமம் பெற வேண்டும் என்று ஆக்சென் நிறுவனத்திற்கு அரும்பாக்கத்தில் உள்ள மாநில ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோடரி தைலத்தைச் சுங்க அதிகாரிகள் முடக்கி வைத்தனர். இதை எதிர்த்து, ஆக்சென் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கோடரி தைலம் சுங்க கட்டண வரம்புக்குள் வருவதால், இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள் சுங்கத்துறையின் சோதனைக்கு உட்பட்டதுதான் எனக் கூறினார்.
மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம் ஆயுர்வேத பொருட்களுக்கும் பொருந்தும் எனக் கூறிய நீதிபதி, அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் இறக்குமதி உரிமம் பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பது தொடர்பான பழைய விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, மனுதாரர் இறக்குமதி செய்துள்ள கோடரி தைலத்தை ஆய்வு செய்து உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா எனப் பரிசீலித்து விடுவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.