நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது.
அதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணை 44-வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் ஒரு அடி சரிந்தது. தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 51 ஆயிரத்து 401 கனஅடியாக அதிகரித்தது.
இதனால் நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.