நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி படக் காட்சிகளை நீக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கும், நெட் ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரிக்க, கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
இதில் சந்திரமுகி படக் காட்சிகளை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, ஏபி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஆவணப் படத்தில் சந்திரமுகி படக் காட்சிகளை நீக்குவதுடன், 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், இன்னும் அவற்றைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நயன்தாரா ஆவணப் படத்தில் சந்திரமுகி படக் காட்சிகளை நீக்குவதுடன் பயன்படுத்தத் தடை விதிக்கவேண்டும் எனவும், ஆவணப் படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி டார்க் ஸ்டூடியோவுக்கும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டது. முன்னதாக தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரி நடிகர் தனுஷூம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.