நடப்பாண்டில் 3ஆவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை கடந்த ஜூன் 29ஆம் தேதி 44வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பிறகு, ஜூலை 5ஆம் தேதி நீர்மட்டம் 120 அடியை எட்டியது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில், காலை 8 மணி அளவில் மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக 120 அடியை எட்டியது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 8 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர்இருப்பு 93 புள்ளி 470 டிஎம்சியாக உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.