முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இருதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அசோக் குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணைக்கு ஆஜராக 9 முறை சம்மன் அனுப்பியும், அசோக் குமார் ஒருமுறை கூட ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் இருதய சிகிச்சையை அசோக் குமார் இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து அமெரிக்காவில் சிகிச்சை பெறவுள்ள மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தாக்கல் செய்யப்படும் ஆவணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.