மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புகாரை விசாரிக்கும் விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி சொத்துவரி நிர்ணயம் செய்தது தொடர்பான புகாரில், மாநகராட்சி அதிகாரிகள் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி வரியை குறைத்தது தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் வினோதினி தலைமையில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கணினி ஆப்ரேட்டர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 திமுக மாநகராட்சி மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், பில் கலெக்டர்கள் உட்பட 16 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, சொத்துவரி முறைகேடு தொடர்பாக அதிமுக கவுன்சிலர் தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அதன்படி, மதுரை மாநகராட்சி முறைகேடு புகாரை விசாரிக்க டிஐஜி அபினவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், மாநகராட்சி முறைகேடு விசாரணை மேலும் சூடுபிடிக்க உள்ளது.