அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களுக்கான மீன்பிடி தடை கால உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அதிமுக சார்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, விவசாயிகள் மற்றும் மீனவர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் படகுகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் பேரிடர் காலங்களில் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும், மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.