முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக இருப்பதாகவும், 2 நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் எனவும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் லேசான தலைச்சுற்றல் காரணமாகக் கடந்த 21ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாக, முதலமைச்சருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனை இயல்பாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக இருப்பதாகவும், அவர் தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.