எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 9 பேரைக் கைது செய்தனர்.
அதோடு மீனவர்களின் விசைப்படகினையும் பறிமுதல் செய்து, 9 மீனவர்களையும் புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, மன்னார் கடற்பரப்பில், மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்களின் படகைப் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால், ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.