தனியார் பேருந்துகளில் மட்டும் பயணச் சீட்டுக் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அரசு பேருந்துகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக்காது என்றும் போக்குவரத்துத் துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது .
டீசல் செலவு மற்றும் உதிரிப்பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப தமிழகத்தில் பேருந்து பயண கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனத் தனியார் பேருந்து சங்கங்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இது தொடர்பாகக் கருத்துக் கேட்புக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், ஓரிரு நாட்களில் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மட்டும் தான் பேருந்தில் ஒரு கிலோமீட்டருக்கு 58 காசுகள் வாங்கப்படுகிறது எனவும் அண்டை மாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டீசல் மற்றும் உதிரிப் பாகங்களின் விலையைக் கருத்தில் கொண்டும், கட்டண உயர்வு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதன் எதிரொலியாகவும் தனியார் பேருந்துகளுக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்படுவது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை வெளியிட்ட அந்த அறிக்கையில், அரசு பேருந்துகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.