மும்பையில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் பயணத் தடை விதிக்கப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பையில் இருந்து கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், மற்றொரு பயணியை திடீரென கன்னத்தில் அறைந்தார். பாதிக்கப்பட்ட நபர், உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், விமானப் பணிப்பெண்கள் அவருக்கு உதவி செய்தபோது, திடீரென இருக்கையில் அமர்ந்திருந்த பயணி, அவரை அறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவத்திற்கு இண்டிகோ நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த முழு விவரம் உடனடியாக தெரியவில்லை என்றும், சம்பந்தப்பட்ட நபரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் பயணத் தடை விதிக்கப்படுவதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.