மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோழவந்தான் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துநரான காந்தி என்பவர் தனது மனைவி உஷாவை 100 நாள் வேலை திட்டப்பணிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
பேட்டை பகுதி அருகே சென்றபோது அதிவேகமாக வந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், உஷா மீது பேருந்து ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த உஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.