திருப்பூரில் SSI சண்முகவேல் வெட்டி கொலை வழக்கில் தொடர்பு உடையதாக கூறப்படும் நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்களான தங்கபாண்டி, மணிகண்டன் ஆகிய மூவரும் மடத்துக்குளம் அருகே தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். மூவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.
இதனையறிந்து சென்ற குடிமங்கலம் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ சண்முகவேல், மூவரையும் சமாதானப்படுத்தி காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, எஸ்எஸ்ஐ சண்முகவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதற்கு உடந்தையாக மூர்த்தியும் அவரது இளைய மகன் மணிகண்டனும் சண்முகவேலை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனையடுத்து SSI சண்முகவேலின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. ஏற்கனவே மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டி இருவரும் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்த போலீசார், கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது உதவி ஆய்வாளரை தாக்கி விட்டு தப்ப முயன்ற மணிகண்டன் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் உயிரிழந்த மணிகண்டனின் உடல், உடுமலையிலிருந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.