தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதன் விசாரணையில் ஆஜரான வைரமுத்து தரப்பு வழக்கறிஞர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என கண்டனம் தெரிவித்தார்.
எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு என்பது உணர்வு பூர்வமான விஷயம் என்றும், இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது எனவும் கூறிய நீதிபதி,
ஐஏஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என எச்சரித்தார்.