வால்பாறை அருகே பால் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது சிறுவனை கரடி கடித்துக்கொன்றது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத் அலி மற்றும் அவருடைய மனைவி ரோகமாலா ஆகியோர் தங்கியிருந்து தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களது மகன் நூர்சல் ஹக், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நூர்சல் ஹக் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொருவரின் வீட்டுக்கு பால் வாங்க சென்றதாக கூறப்படுகிறது
அப்போது வீட்டிற்கு அருகே கரடி ஒன்று, சிறுவனை தாக்கி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் இழுத்து சென்று கடித்துக் கொன்றுவிட்டு வனப்பகுதிக்குள் புகுந்துவிட்டதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர்.
அப்போது தேயிலை தோட்டத்திற்கு அருகில் உடலில் பலத்த காயங்களுடன் நூர்சல் ஹக் பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.