மாணவர்கள் மத்தியில் நாட்டுப் பற்றை வளர்க்கும் வகையில், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த பாடங்கள் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின்படி, நடப்பு நிகழ்வுகளை அவ்வப்போது பாடத்திட்டத்தில் சேர்க்க, என்.சி.இ.ஆர்.டி. எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது.
அதன்படி, ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசின் பாடத்திட்டங்களில் படிக்கும், 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் தனியாகவும், 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மேம்பட்ட வகையிலும் பாடத்திட்டத்தை என்.சி.இ.ஆர்.டி., வடிவமைத்துள்ளது.
பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, இந்திய ராணுவம் எடுத்த போர் நடவடிக்கைகள் குறித்து, முதல்நிலை மாணவர்களுக்கு, ‘வீரப் பயணத்தின் துவக்கம்’ என்ற தலைப்பிலும், மேல்நிலை மாணவர்களுக்கு ‘துணிச்சலும் மரியாதையும்’ என்ற தலைப்பிலும், 8 முதல் 10 பக்கங்களில் புதிய பாடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் என்பது, வெறும் குறியீட்டுப் பெயர் அல்ல; கணவனை இழந்த ஹிந்து பெண்களுக்கு தங்களின் அன்பையும், உறுதுணையையும் தெரிவிக்கும் லட்சக்கணக்கான மக்களின் உணர்வைப் பிரதிபலிப்பது எனப் பிரதமர் மோடி கூறியதையும் பாடத்தில் குறிப்பிட்டுள்ளனர்.