தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து சீரானதால் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழையின் காரணமாகக் குற்றால பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பேரருவியில் குளிக்க முடியாமல் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளித்துச் சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் பேரருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வார விடுமுறையைக் கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் பேரருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர்.