வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வராண்டை வரும் செப்டம்பர் 15 ம் தேதி அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை நேரில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு முன் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராகாத நிலையில், அவரின் மனைவி சாந்தகுமாரி மட்டும் நேரில் ஆஜராகி, தனக்கெதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சாந்தகுமாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.