தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவுகிறது. இது தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பென்டோக்டர்ன் ஷினாவத்ரா, கம்போடியா முன்னாள் பிரதமர் ஹுன் சென் உடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது தன் நாட்டு தளபதியை குற்றம்சாட்டி அவர் பேசிய ஆடியோ கசிந்தது. இதையடுத்து நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாக ஷினாவத்ராவை பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் சமீபத்தில் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்ய 492 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் அனுடின் சார்ன் விரகுல் மற்றும் சாய்கசேம் நிடிஸ்ரீ இடையே போட்டி நிலவியது. அதில் 247 ஓட்டுகளை பெற்ற அனுடின் சார்ன் விரகுல் அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வாகி உள்ளார்.