டிஜிபி அலுவலகம் முன் நடந்த மோதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி, நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் டிஜிபி அலுவலகம் முன்பு கடந்த 6ம் தேதி புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி-விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக இருதரப்பும் அளித்த புகாரின்பேரில் மெரீனா போலீசார் ஏர்போர்ட் மூர்த்தி மீதும், விசிக நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், நேற்று முன்தினம் இரவு, பெசன்ட் நகர் வீட்டில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
மருத்துவப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏர்போர்ட் மூர்த்திக்கு ரத்த அழுத்தம் காரணமாகத் திடீரென மயக்கம் ஏற்பட்டது.
இதனால் மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரை போலீசார் அனுமதித்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஏர்போர்ட் மூர்த்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.