தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 10 வயது சிறுவனை மர்ம நபர்கள் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டி.கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற 10 வயது சிறுவன் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஊருக்கு எல்லையில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் சிறுவன் முத்துப்பாண்டி இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி ஆட்டோவில் ஏற்ற முயன்றுள்ளனர். முகமூடி அணிந்தபடி வந்த 3 பேர் சிறுவனை கடத்தி மயக்க ஊசி செலுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி வந்த சிறுவன் சம்பவம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினரிடம் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனிடமும், அப்பகுதி மக்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.