திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழகத்தில் பாதாள சாக்கடைக் கழிவுகளை நீக்கும் தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறப்பது தொடர்கதையான நிலையில், தற்போது மேலும் இருவர் திருவெறும்பூரில் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சமூக நீதி குறித்து சந்து பொந்துகளில் எல்லாம் வகுப்பெடுக்கும் திமுக அரசுக்குத் தூய்மைப் பணியாளர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க பணமில்லையா? அல்லது மனமில்லையா? ஒருபுறம் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி நல்வாழ்வுக்கு வித்திடும் வகையில் பாரதப் பிரதமர் மோடியின் அரசு நமஸ்தே திட்டத்தை செயல்படுத்திவருகிறது, மறுபுறம் முதல்வர் ஸ்டலினின் அரசோ போதிய உபகரணங்கள் வழங்காது தூய்மைப் பணியாளர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தான் தேசிய மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் வித்தியாசம்! தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பறித்துவிட்டு, சில லட்சம் ரூபாயை மட்டும் இழப்பீடாகக் கொடுத்து, செய்த தவறை சரிசெய்யாது அடுத்த தேர்தலுக்கான விளம்பரத்திற்கு ஆயத்தமாகிவிடும் திமுக அரசு, இனி ஒருநாளும் சமூகநீதி குறித்து வாய்திறக்கவே கூடாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.