திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நவராத்திரி 2-ம் நாள் விழாவில், ஆதிபராசக்தி தாயார் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நடந்த 2-ம் நாள் விழாவில் ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.
திருச்சி மாவட்டம், உறையூரிலுள்ள நாச்சியார் அம்மன் கோயிலிலும் நவராத்திரி 2-ம் விழாவை ஒட்டி வீதி உலா நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்த நாச்சியார் அம்மனை அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.