மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக விளையாடி 83 பந்துகளில் ஒரு சிக்சர், 13 பவுண்டரி உள்பட 115 ரன்கள் எடுத்தார்.
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 43.2 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூசிலாந்து கேப்டன் சோபி டிவைன், போராடி சதமடித்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.