கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழக அரசு மிகத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு செயலாற்றி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கரூர் சம்பவம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வு குழு மூலம் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநில முதலமைச்சராக உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கே முன்னோடியான தமிழகம், கூட்ட நெரிசல் விபத்துகளை தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும் என்றும், மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்து ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வடிவமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத் தக்க மாடலாக இது அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
துடைக்க முடியாத துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்றும், கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படியொரு பெருந்துயரம் நாட்டில் எங்கும் நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.